கோடரி – விறகு அடுப்புடன் ஒன்றிப் பிணைந்தது

பன்நெடுங்காலமாக எங்களால் பயன்படுத்தப்படும் கோடரி பல்வேறு மாற்றுப் பெயர்கள் கொண்டு அழைக்கப்படுகிறது. அதாவது “கோடாலி”, “கோடாரி” என்பனவே. மரத்தை வெட்டுவதற்கு அல்லது பிளப்பதற்கு பயன்படும் கோடரி ஆரம்ப காலங்களின் யுத்தங்களின் போது ஆயுதமாகவும் பயன்பட்டது. ஒரு கைப்பிடியையும் கூரான வெட்டும் பகுதியையும் கொண்டது. கைப்பிடி மரத்தில் செதுக்கப்பட்டதாக இருக்கும் கூரான வெட்டும் பகுதி உலோகத்தால் ஆக்கப்பட்டது. ஆதி காலத்தில் வெட்டும் பகுதி கல்லில் செதுக்கப்பட்டதாக பகுதியாக பாவிக்கப்பட்டது.
தற்போதும் கிராமப்புறங்களில் விறகு பாவனை அதிகமாக உள்ளது. ஒவ்வோர் வீட்டிலும் கோடரி காணப்படும். தமக்கு தேவையான விறகை கொத்துவதற்கு அல்லது பிளப்பதற்கு கோடரி பாவிக்கப்படும். அடுப்பில் வைக்கக்கூடிய அளவில் ஒரு சீராக பிளக்கப்படும்.
இதைப்போல சிறிய அளவில் விறகை வெட்டுவதற்கு கைக் கோடரி பயன்பட்டது. இரு சிறிய அலகும் குறுகிய பிடியுடனும் அமைந்திருக்கும். நீண்ட மரக்குற்றியை ஒரு சீராக நேர்கோட்டில் பிளப்பதற்கு நல்ல அனுபவம் இருந்தால் மட்டுமே முடியும். பிளக்கும் போது சில தடவைகள் நிலத்திலுள்ள கல்லில் பட்டு அலகின் முனை உடைவது அல்லது நெளிவதும் உண்டு. எது எவ்வாறாயினும் கோடரி என்றும் எம் வாழ்வில் ஒன்றிப் பிணைந்த ஒரு உபகரணமே.



Leave a Reply