வெங்காயம் யாழ்ப்பாணத்துச் செல்வம்

வெங்காயம் யாழ்ப்பாணத்துச் செல்வம் பற்றிய ஒரு அலசல்.
இதென்னடா ஆருக்கோ பேச்சு விழுது எண்டு நினைச்சு பின்னங்கால் பிடரியிலை பட ஓட வெளிக்கிடாதையுங்கோ.நான் வெங்காயம் எண்டு சொன்னது எங்களின்டை செல்வ(ல)த்தை தான்.எங்கன்ரை ஊரிலை அதை “காய்” எண்டும் சொல்லுவம். எங்கள் எல்லாருக்கும் செல்வதை அள்ளிச் சொரிகின்ற லக்ஸ்மி அது. வெங்காயத் தோட்டத்திலையிருந்து உழைத்து எங்களவர்கள் எங்கேயோ உயரத்துக்கெல்லாம் சென்றிருக்கிறார்கள். எங்களுக்குக் காசு மழைபொழிகின்ற காமதேனு அது.
நாங்கள் அதைக் காலால் உழக்க மாட்டோம். மாலையாகி, வீட்டை விளக்குக் கொழுத்திய பின்னரோ அல்லது வெள்ளிக் கிழமைகளிலோ யாருக்கும் அதைக் கொடுக்கமாட்டோம். ஏனென்றால் அவ்வாறு கொடுத்தால் அந்த லக்ஸ்மி எங்களை விட்டுப்போகிறாள் என்ற நம்பிக்கையுடையவர்கள் நாங்கள். (நீங்கள் சிலவேளைகளில் காசினை வெள்ளிக்கிழமைகளிலோ அல்லது விளக்குக் கொழுத்திய பின்னரோ கொடுக்காமால் இருக்கலாம்) நாங்கள் அந்தப் பணத்துக்கு ஈடாக வெங்காயத்தையும் நினைத்துக் கொள்வதால் அதனை மேற்கூறிய தருணங்களில் வெளிச்செல்ல அனுமதிக்க மாட்டோம்.
எங்கள் வெங்காயத் தோட்டங்களில் நாங்கள் செருப்புடன் இறங்கவே மாட்டோம். வேறொருவன் இறங்கினாலும் அவன் காலை உடைக்கவும் தயங்க மாட்டோம். ஏனென்றால் எங்கள் காசுக்கடவுளை காலால் உழக்குகின்ற செயலாகவே நாங்கள் அதைக் கருதுவோம். வெங்காயச் சருகு காற்றிலே சரசரத்து ஏற்படுத்துகின்ற சரசரப்போசையும் அதன் வாசமுமே எங்களுக்கு நித்திரையை வரவைக்கும். கறி, புளிகளில் காரசாரமாய் வெங்காயம் வெளிப்பட்டால் தான் எங்களுக்குப் சாப்பாடு இறங்கும். இல்லையென்றால் பத்தியப் படாது. நாங்கள் வெங்காயத்தோடை எப்பிடி ஒட்டியிருக்கிறம். எங்கடை வாழ்க்கையிலை அது எப்பிடிப் பின்னிப் பிணைஞ்சிருக்குது எண்டு சொல்லவெளிக்கிட்டுத் தட்டுத் தடுமாறி வந்த ஒரு சில உதாரணங்கள் தான் உவை.
இப்பிடி எங்கன்ரை மூச்சோடையும், பேச்சோடையும் கலந்த வெங்காயச் செய்கை பற்றியதொரு பதிவு தான் இது. யாழ்ப்பாணத்தில் வெங்காயச் செய்கைக்கு புன்னாலை கட்டுவன், இடைக்காடு, நவக்கிரி, வலிகாமத்தின் இன்னும் பல பகுதிகள், தென்மராட்சி மற்றும் வடமராட்சியில் மந்திகை, வதிரி, புலோலி, பொலிகண்டி போன்றவை பிரசித்தி பெற்ற இடங்களில் சிலவாகும். வேறு சிலர் போயிலை(புகையிலை), மற்றும் கத்தரி, மிளகாய், பூசணி, பயிற்றை, பாகல் போன்ற சில்லறைப் பயிர்களும் பயிரிடுவினம். வெங்காயத்தை விட பொயிலை வருமானம் கூடின பயிரென்றாலும் அதற்கு அதிகளவு கஸ்ரப்பட வேண்டியிருக்கும்.
நான் ஏற்கனவே சொன்னது மாதிரி வெங்காயத்தை நாங்கள் கூடுதலாகக் “காய்” எண்டு தான் சொல்லுவம். பயிரிடுகின்ற தோட்டத்தை “தறை” அல்லது “தெணி“எண்டு சொல்லுவோம். அவற்றுக்கும் “ஐயன்தெணி“, “மாலந்தெணி“, “வெளித்தெணி“, “மடத்தெணி“, “வல்லூட்டி“, “ஆவலம்பிட்டி“, “காறவாய்ப்பள்ளம்” எனப் பெயர்கள் எல்லாம் உண்டு. அவற்றின் பரப்பளவு பொதுவாக “பட்டி“யில் தான் அளக்கப்ப்டும். 10 பட்டி ஒரு “பரப்பு” க்குச் சமனாகும்.
எங்கடை ஊரிலை முழுநேர விவசாயிகள் அல்லது முற்றுமுழுதாக விவசாயத்தை நம்பிக் கொண்டிருக்கிறாக்கள் எண்டால் மிச்சும் குறைவு. பெரும்பாலான ஆக்கள் பாட் ரைமா மற்ற வேலைகளைச் செய்துகொண்டு வெங்காயத்தை முழுநேர வேலைகளாக செய்யிறவை. ரீச்சர்(Teacher), போஸ்ற் பீயோன்(Post Peon), கடை முதலாளி, பிரதேச சபை உட்பட ஏனைய அரசாங்க உத்தியாகத்தர்மார், அதிபர் எண்டு தொடங்குகிற லிஸ்ற் டொக்டர், இஞ்சினியர், லோயர்(Lawyer), பாங்க் மனேச்சர்((Bank Manager) வரையாய் அந்த பாட் ரைம்(Part Time) வேலையின் வீச்சு வேறு படும்.
பாட் ரைம் வேலை எண்டு நான் சொன்னது வேலை செய்யிற நேரத்திலையில்லை. வாற வருமானத்தின் படி. அவையளுக்கு உந்தக் கண்டறியாத வேலைகளிலை கிடைக்கிற சம்பளம் வந்து மட்டு மட்டா குடும்பச் செலவுக்கத் தான் காணும். தங்கடை தொழிலின்ரை வரும்படியை வைச்சுக் கொண்டு அவையளே சொல்லுவினம் தோட்டம் தான் எங்கடை மெயின் வேலை. எங்கடை தொழிலுகள் எல்லாம் சப்(Sub)தான் எண்டு.
என்னதான் அவையள் உத்தியோகம் பாத்தாலும், படிச்சாலும் அவையள் எல்லாரும் நல்ல “கைபக்குவப்பட்ட” தோட்டக்காராக்கள் தான். நான் கண்ணாலை கண்ட எத்தினை எங்கடை ஊர், பிரதேச அண்ணாமார், தேப்பனோடை சேர்ந்து மம்பெட்டி பிடிச்சு, எருப்பரவிக் கொத்தித் தோட்டஞ் செய்து இண்டைக்கு இஞ்சினியர், டொக்ரர்மாராய் ஆகியிருக்கினம். ஒரளவு வயதிலேயே படிப்பு சறுக்கினாலுமெண்டிட்டு கைகாவலா எல்லரும் தோட்ட வேலையளைப் பழகி வைச்சிருக்கிறது தான்.
இரண்டு வேலை தெரிஞ்சிருக்கிறதும் நல்லது தானே. ஆனால் நான் அந்தளவுக்கு ஒண்டும் செய்யவில்லை. ஆனாலும் எல்லா வேலையும் கொஞ்சம் கொஞ்சம் செய்யப் பழகியிருந்தன்.ஆனாலும் பெரிதளவில் உடம்பை முறிச்சுச் செய்யாததாலை(வேறையென்ன பஞ்சி தான்.அதாலை “பம்ஸ்” அடிச்சது தான் அந்தக்காலத்திலை)அந்தளவுக்குக் கைப் பக்குவம் இல்லாட்டிலும் எதோ பிடிக்கோணும் எண்டதுக்காக வேண்டி மம்பெட்டி பிடிச்சிருக்கிறன். அதெல்லாம் தெரிஞ்சபடியாலை இண்டைக்கு இந்தப் பதிவை எழுதிறன்.
ஆனால் எங்கடை பொடியள் எவ்வளவு கஸ்ரமான சூழ்நிலைகளிலையும் குண்டுக்குப் பயந்து பங்கருக்கை ஒளிச்சிருந்து குப்பி விளக்கிலை படிச்சு முன்னுக்கு வந்த ஆக்கள் கனபேர். அவையள் எல்லாம் எங்களுக்கு, எங்கடை பொடியளுக்கு முன்மாதிரியா இருக்கினம்.
இதை இப்போதைய போனும் கையுமாகத் திரிந்து காசையும் வீணாக்கி, காலத்தையும் மண்ணாக்கி, மூஞ்சிப் புத்தகத்தாலை வயித்திலை பிள்ளையை வருவித்துக்கொண்டும் அனைவரையும் பேய்க்காட்டிக் கொண்டிருக்கிற இளைய சமுதாயம் உணர்ந்து கொள்ளவேண்டும் என்பது எங்கள் எல்லோரதும் அவா. அது ஒரு புறம் இருக்க நாங்கள் விசயத்திற்கு வருவோம்.
எங்கட ஆக்கள் என்ன செய்வினம் எண்டால், விடியக் காலமை மிசினை (நாங்கள் வோட்டர் பம்மை மிசின் எண்டு தான் சொல்லுவம்) கொண்டு போய் தோட்டத்துக்கை பூட்டிப் போட்டு, சேட்டைக் கழட்டி கிணத்துக்குப் பக்கத்திலையிருக்கிற பூவரசமரத்தில கொழுவிப் போட்டு, தண்ணி மாறுவினம். ஒரூ 8, 8.30 அப்பிடி அவையின்ரை மனுசிமார் தோட்டத்துக்கை சாப்பாடு கொண்டுவர, தோட்டத்துக்கையே சாப்பிட்டு, வாயைக் கொப்பளிச்சுப் போட்டு, மனுசிமாரைத் தண்ணி மாறவிடுவினம்.
இனி வெங்காயச் செய்கையின் ஒவ்வொரு படியையும் படிப்படியாகத் தருகின்றேன். நீங்களும் ஒரு தோட்டக்காரனெண்டால் ஏதாவது பிழையெண்டால் சொல்லுங்கோ இல்லையெண்டால் பேஸ்புக்கிலை தோட்டஞ் செய்த எக்ஸ்பீரியன்சை வைச்சுக்கொண்டு இதையும் செய்து பாருங்கோவன்.
வெங்காயம் செய்யும் போகத்தினடிப்படையில் நாங்கள் “கோடைக்காய்“, “மாரிக்காய்” எண்டு சொல்லுவம். மாரிக்காய் மார்கழி, தையில் விதைச்சு, மாசி, பங்குனியில் முடியும். கோடைக்காய் வைகாசி ஆனியில் தொடங்கி ஆடி ஆவணியில் முடியும். எங்களது இடங்களில் பெரும்பாலும் மாரிக்காய் மட்டுமே நடப்படும்.
கொத்திக் குப்பைதாட்டல்
பெரும்பாலும் ஐப்பசியிலை மாரிகாலம் தொடங்கினாப்போல, ஒரு ஒண்டிரண்டு மழை பெய்ஞ்சு, மண்ணை நனைச்சாப்போல தோட்டத்தைப் பண்படுத்தத் தொடங்கிடுவம். பழைய கொட்டிலுகளைப் புடுங்கிப் புதுசா மேய(வேய) வெளிக்கிடேக்கை வாற, அந்தக் கொட்டிலின்றை பழைய கிடுகுகள், பனையோலைகள், இலைகுழைகள், மாட்டெரு, ஆட்டுப்புழுக்கை போன்றவற்றைக் கொத்தி தாட்டுத் தான் பண்படுத்தல் தொடங்கும்.
உழுதல்
கொத்திப் பிரட்டி, ஒரு மாதத்திற்கு மேல் அப்பிடியே நிலத்தை விட்டு விட மேலும் மேலும் மழை பெய்ய மண் அடைஞ்சு மண் இறுகி விடும். பிறகு லான்ட்மாஸ்ரரால் நிலத்தை உழுவார்கள். அல்லது இதற்குப் பதிலாக இப்போதும் கொத்தலாம். உண்மையில் கொத்தும் போது தான் ஆழமாக மண் தோண்டப்பட்டு புரட்டப்படுவதால் இதுவே சிறந்த முறையாகக் கருதப்படுகின்ற போதும் செலவு குறைவு மற்றும் இலகு போன்ற காரணங்களினால் தான் உழப்படுகின்றது.
வாய்க்கல் வரம்பு போடுதல்
பிறகு பெரிய பெரிய மண்கட்டிகள் சின்னஞ்சிறு கட்டிகளாக உடைக்கப்பட்டு கயிற்றுப்பந்தைப் பயன்படுத்தி நேராக வாய்க்கால் வரம்பு போடப்படும்.
வெங்காயம் நோண்டுதல்/காய் நுள்ளுதல்
வெங்காயத் தாறிலிருந்து வெங்காயத்தை நுள்ளி எடுத்தலைத் தான் வெங்காயம் நோண்டுதல் என்று சொல்லப்படுகின்றது. வெங்காயத்தை நுள்ளியெடுப்பது மட்டுமில்லாமல் வெங்காயத்தின் வெளிச்சரையெல்லாத்தையும் உருத்தி, செத்தல் வெங்காயங்களை ஒதுக்கித் தான் வெங்காயம நோண்டுவோம். நோண்டிய பிறகு பார்த்தால் குங்குமக் கலரோடு வெங்காயாம் சும்மா ஜொலித்துக் கொண்டிருக்கும்.
தெளித்தல்/புழுதித்தண்ணி
வெங்காய நடுகைக்கு முதல்நாள் மிசின் பூட்டி, புதிதாகப் போடப்பட்ட வாய்க்காலில் புழுதித் தண்ணி தாராளமாக பாயவிடப்படும். ஒரு பழைய சாப்பாட்டு கோப்பை போன்ற ஏதாவது தட்டையான பாத்திரத்தால் எல்லா இடமும் நல்லா தண்ணியை அள்ளித் தெளித்து மண்ணை நன்றாக குளிர்விப்போம். மண் நன்றாக நனைந்தால் தான் நடுகைக்கு இலகுவாக இருக்கும்.
சாறுதல்
அடுத்தநாள், அதாவது வெங்காய நடுகையன்று காலையில் நிலம் சாறப்படும். சாறுதல் என்பது கொத்துதல் மாதிரித்தான். ஆனால் கொத்துதல் இல்லை. மண்வெட்டியை சிறிதளவே தூக்கி, அதிகளவு ஆழமாகத் தோண்டாமல், சிறு சிறு கட்டிகளாக அல்லது தூளாக மண் வருமாறு கொத்துதல் ஆகும். சின்னக் கொத்துதல் என்று வேண்டுமானால் சொல்லலாம்.
பாத்தி கட்டுதல்
ஒராள் முன்னுக்கு சாறிக் கொண்டுபோக, மற்றவர் அந்த மண்ணை நன்றாக உருத்தி, மண்ணைப் பதமாக்கி, மடை விட்டு, நடுகைக்கு ஏற்றாற் போல பாத்தி கட்டிக் கொண்டுபோவார்.
நடுகை
நடுகை இன்றைக்கு நடுகை என்றால் விடியக் காலமை வெள்ளன கோயிலுக்குபோய் கற்பூரங் கொழுத்தி, சிதறு தேங்காய் அடிச்சுப் போட்டு அவற்றை கோயில் வாசலிலை கிடக்கிற கொஞ்சம் பூவையும் எடுத்துக் கொண்டு வந்து வீட்டிலை ராசியான கைக்காரர் யாராவது நாள்க்காயை நடுவினம். நாள்க்காயை நட்ட பின்னர் நடுகைப் பெண்டுகள் வந்து வெங்காயத்தை கட்டின பாத்திகளிலை மள மளவெண்டு நட்டுக் கொண்டு போவினம்.
மிதந்த காய் ஊண்டுதல்
நடுகை பெண்டுகள் அவசரத்திலை காய் ஊண்டிக்கொண்டு போகேக்கை சில காய்கள் வடிவாக மண்ணுக்குள் ஊண்டுப்பட்டிருக்காது. அப்பிடி ஊண்டுப் பட்டிருக்காவிட்டால் வெங்காயம் சிலவேளைகளில் தண்ணி மாறும் போது அடித்துக் கொண்டு செல்லப் படலாம் என்பதோடு அவை உருண்டு, திரண்டு, விளையமாட்டாது. நன்றாக விளைந்தால் தானே நல்ல நிறை நிக்கும். நாங்களும் நல்ல லாபம் எடுக்கலாம். அப்பிடி வடிவாக ஊண்டப்படாத காய்களை வெங்காயம் முளைவிடத் தொடங்கிய பிறகுதான் அவதானிக்கலாம். வெங்காயம் நட்டு ஒரு 5,6 நாளைக்குப் பிறகு அப்பிடி வடிவாக ஊண்டப்படாத காய்களை ஒரு குத்தூசியால் நிலத்தில் குத்தி அந்த துளைக்குள் இந்தக் காய்களை ஊண்டிவிடுதலைத் தான் மிதந்த காய் ஊன்டுதல் எண்டு சொல்லிறது.
தண்ணி மாறுதல்
கூடுதலாக கிணத்திலையிருந்த மிசினாலை இறைச்சுத் தான் தண்ணி மாறுவம். முதல்தண்ணி வெங்காயம் நட்டு ஒரு பத்து நாளுக்குப் பிறகுதான் இறைப்பம். அதுக்குப் பிறகு ஒவ்வொரு 4,5 நாளுக்கொருக்கால் தண்ணி மாறுவம். இந்தத் தண்ணி மாறுறதெண்டுறது பயங்கர கரைச்சலான விசயம். பாத்தால் சிம்பிளான வேலை மாதிரித்தான் தெரியும். அனுபவம் இல்லையோ நிச்சயமா ஏலாது. உடைக்காமல் மாறவேணும். இடைக்குள்ளை எங்கையாவது உடைச்சுதெண்டால் அள்ளிப் போடுறதுக்கும் மண் எடுக்கேலாது. ஏனெண்டால் வெங்காயம் எல்லா இடமும் நடப் பட்டிருக்கும். தண்ணி மாறேக்குள்ளையும் அடித்தறையிலையிருந்து தலைப்பு தறை வரை போகேக்கை இடப்பக்கமா மாறிகொண்டு போனால், தலைப்பிலிலையிருந்து திரும்பி வரேக்கை வலப்பக்கமா வெட்டிக் கட்டிக் கொண்டுவரலாம்.
புல்லுப் புடுங்குதல்/உரம் போடுதல்/மருந்தடித்தல்
இது உங்கள் எல்லாருக்கும் தெரிஞ்ச வேலைகள் எண்ட படியால் இதுக்கு விளக்கம் தேவையில்லயெண்டு நினைக்கிறன்.
பூ முறித்தல்
வெங்காயம் ஒரு 65 – 70 நாள் பயிர். அது ஒரு 45 – 50 நாளுக்குப் பிறகு மொட்டுவிட்டுப் பூக்கத் தொடங்கும். அந்தப் பூவை நாங்கள் முறித்துத் தந்தால் நீங்கள் அதை சுண்டி சாப்பிடிருப்பியள். அதை முறிக்காமல் விட்டால் வெங்காயம் விளையாது எண்டபடியால் தான் அதை முறிக்கிறது. ஏனெண்டால் வெங்காயத்தின்றை சத்தெல்லாம் பூவுக்குப் போகும் எண்டு பெரியாக்கள் விளக்கம் குடுப்பினம். பூ கல்லு வல்லாரை அல்லது வேதாள வெங்காயத்திற்கு தான் வருகிறது. ஊர் வெங்காயத்திற்கு அவ்வாறு பூ வருவதில்லை.
நனைத்தல்
ஆகலும் கடைசியான இறைப்பை நனைத்தல் என்று சொல்லுறது. இதற்கும் ஒரு கோப்பையால் அள்ளித் தெளித்து வரம்பு, வாய்க்கால் எல்லாம் நன்றாக ஈரமாக்குவோம். அப்படியென்றால் தான் கிண்டுவதற்கு நன்றாக இருக்கும்.
கிண்டி விரித்தல்
நனைத்ததற்கு அடுத்தநாள், வெங்காயத்தைக் கிண்டி அடுக்கி விரித்து, பச்சையாக இருக்கும் வெங்காயத்தாறு காயும் வரை ஒரு கிழமை வரை வெங்காயம் தோட்டத்திலேயே விடப்படும். முடிச்சல் வெங்காயம் காய்ஞ்ச பிறகு, கையால் பிடிக்கக் கூடியளவு தாற்றுடன் வெங்காயத்தை எடுத்து, கடல் தண்ணியில் ஊறப்போட்ட, பனஞ்சார்வோலை ஈர்க்காலே அளாவி, தாற்றை ஒரு மடிப்பு மடிச்சுக் கட்டி அந்த ஈர்க்கை ஒரு இழுப்பு இழுத்து வெங்காயப் பிடி கட்டுவோம். இப்போதெல்லாம் சணல் கயிறு பாவிக்கப்படுகிறது.
பிணைச்சல்
இப்படியாக முடியப்பட்ட வெங்காயப் பிடிகள் நான்கை ஒன்றாக இணைத்து ஒரு பிணைச்சல் கட்டப்படும். ஏற்றி, இறக்குவதெல்லாம் இந்தப் பிணைச்சல்களினால் இலகுவாக்கப்பட்டுவிடும். இந்தப் பிணைச்சல்கள் எல்லாத்தையும் ஒரு லான்ட் மாஸ்ரரில்(Land Master) ஏற்றிக்கொண்டு, வந்து வீட்டை சேர்ப்பிக்க வேண்டியது தான் அடுத்த வேலை. இந்த ஒரு நாளுக்காகத்தான் நாங்கள் சின்ன வயதுகளில் ஏங்கித் தவித்து, காத்திருந்திருப்போம். எல்லாம் ஒரு லான்ட் மாஸ்ரர் சவாரிக்காகத் தான். லோட் நிரம்பிற அளவுக்கு, வெங்காயம் ஏத்தி முடிய எங்களையும் அந்த வெங்காயங்களுக்கு மேலை ஏத்தி விடச்சொல்லி நாங்கள் பிடிக்கிற அடம் தாங்காமல் தூக்கி ஏத்திவிட்டுவிடுவார்கள். ஏத்திவிட்டால், லான்ட் மாஸ்ரர் ஓடேக்கை பயமாத்தான் இருக்கும் எண்டாலும், வெங்காயப் பிடியின்ரை மூட்டுக்கை கையைக் கொளுவி, ஒரு உடும்புப் பிடியைப் பிடிச்சுக்கொண்டு, ஏதோ பட்டத்து இளவரசன் பல்லக்கிலை போற மாதிரி ஒரு பீலிங்கோடை தான் நாங்கள் ஊர் ரோட்டுகளாலை லான்ட்மாஸ்ரரிலை அண்டைக்குப் போவம். அந்த இளவரசனுக்குக் கூட அப்பிடியொரு இறுமாப்பு இருந்திருக்காது. ஆனால் எங்களுக்கு ஒரு திமிர் இருந்து கொண்டேயிருந்திருக்கும். எங்கடை வயதையொத்த குஞ்சு, குருமனெல்லாம் எங்களைப் பாத்து வாயைப் பிளந்து பொறாமைப் பட்டு நிண்டு கொண்டிருக்குங்கள். எங்களுக்கும், எங்களுக்கெல்லாம் தங்கடை தோட்ட வெங்காய முடிச்சலுக்கு திமிராய் போன எங்களது வட்டப் பொடியளுக்கு நாங்களும் கொஞ்சமும் குறைஞ்சாக்கள் இல்லையெண்டு காட்டோணும், எண்டு காட்ட வேணுமெண்டதுக்காக வேண்டி, அப்பிடியொரு திமிர் வந்து தொற்றிப் போடும்.
தூக்குதல்
பிறகென்ன, வீட்டை கொண்டு வந்த வெங்காயத்தை எங்கை நிலத்திலேயே வைச்சிருக்கிறது. அப்பிடிக் கிடந்துதெண்டால், காய் அண்டுப்பட்டு(நசிபட்டு) பழுதாப் போடும். அதாலை வெங்காயத்துக்கெண்டு பிரத்தியேகமாப் பாவிக்கிற கொட்டிலுகளுக்கையோ அல்லது எங்களது வீட்டு அறைகளுக்குள்ளேயோ ஒவ்வொரு பிணைச்சலா நைலோன் கயித்திலை கட்டித் தூக்குறதைத் தான் தூக்குதல் எண்டு சொல்லுவம்.
வித்தல் (விற்றல்)
இப்படியொண்டைச் சொன்னால் நீங்கள் எனக்கு இப்ப அடிக்கத் தான் வருவியள் எண்டு எனக்குத் தெரியும். என்ன நல்ல விலையாப் பாத்து விக்க வேண்டியது தான். உதுகும் தெரியாதே..?உது கஸ்ரம் இல்லைத் தானே..கூடுதலாக வைகாசி பறுவம் தாண்ட தான் வெங்காயம் சும்மா நெருப்பு விலை விக்கும்.
(இப்ப என்ன போகுது… நாலை முக்கால், ஐஞ்சு போகுதாம்… எண்டால் இப்ப வெங்காயம் ஒரு அந்தர் 4750, 5000 ரூபா வரை விக்குதாம் எண்டு அர்த்தம். என்ன நீங்களும் நட்டியள் எண்டால் நல்லா உழைக்கலாம். மனுசிமாரட்டை ஒரு flat தா எண்டு சீதனம் தா எண்டு வாங்கிறதை விட, ஒரு 250, 300 பட்டி தறை சீதனமா வாங்கினால் ஒரு பத்து வருசதுக்கிடையிலை நீங்களே 3 flat வாங்கிற அளவுக்கு உழைச்சுப்போடலாம்.
சில வட்டார சொற்கள்
பத்தியப்படாது – சாப்பாடு திருப்தியாக இல்லாவிட்டல் இப்படி சொன்னாலும் இதன் அதிக பயன் பாடு மருத்துவதுடனேயே வருகின்றது. ஒருவர் நோய்வாய்ப் பட்டிருக்கும் சந்தர்ப்பத்தில் அவருக்கு உண்ணக் கொடுக்கும் விசேட கவனிப்புள்ள உணவுகளை “பத்தியச்சாப்பாடு” என்று ஈழத்திலே அழைப்பார்கள் போயிலை – புகையிலை, வெற்றிலைத் தாம்பூலத்துடன் சேர்த்து சாப்பிடப்படுவது பாணி போட்டு பதமாக்கப்பட்ட புகையிலை. சில்லறைப் பயிர்கள் – சிறு வருமானம்/கைச்செலவுக்கு வருமானம் தரும் பயிர்கள்மிச்சும் குறைவு – மிகக் குறைவு வரும்படி – வருமானம் கை பக்குவப்பட்ட – செய்கின்ற தொழிலில் கை தேர்ந்த கீழை – கீழே கந்தோர் -அரசாங்க வேலை திணைக்களம்
உருத்தி -நீக்கி
சரை – கோது என்றும் சொல்லலாம். இங்கு வெங்காயத்தை சுற்றியிருக்கின்ற காய்ந்த தோல் என்றும் சொல்லலாம்
வெங்காயம் நோண்டுதல் – வெங்காயம் நுள்ளுதல்
புழுதி – காய்ந்த மண் என்றும் சொல்லலாம். காற்றுக்குத் தூசியை அள்ளித் தெளித்தவாறு பறக்கும்
மடை – தண்ணிபாய விடப்படும் பாதை
விடியக் காலமை -அதி காலை
வெள்ளன -முதலே/வேளையில்
நாள்க்காய் -நல்ல நாளில், சுபநேரத்தில் நாள்க்காய் நடப்பட்டுத் தான் வெங்காயச் செய்கை ஆரம்பிக்கப்படும்.
அடித் தறை – தோட்டத்தின் ஆரம்ப எல்லை
தலைப்புத் தறை – தோட்டத்தின் முடிவு எல்லை
கிழமை – கிழமை என்றால் திங்கள், செவ்வாய் என நாட்களைக் குறித்தாலும் வாரம் என்றொரு சிறப்புப் பதமும் ஈழத்தில் உண்டு.
பனஞ் சார்வோலை ஈர்க்கு – பனையின் குருத்திலிருந்து ஓலையை நீக்கி எடுக்கப்பட்ட ஈர்க்கு
அளாவி – சுற்றி என்றும் சொல்லலாம் அல்லது வளைத்து என்றும் கொள்ளலாம்
அண்டுப்பட்டு – இது அமத்துப் பட்டு என்ற பொருளில் தான் இங்கே வரும்
பறுவம் – பௌர்ணமி
மம்பெட்டி – மண்வெட்டிதான் இவ்வாறு அழைக்கப்படும். அது “ப” அல்லது பிக்காஸ், என்றும் “வ்” போன்ற வடிவுடைய மண்வெட்டி தோட்ட மண்வெட்டி என்றும் தண்ணி மாறப் பயன்படுகின்ற மண்வெட்டி கட்டை மண்வெட்டி என்றும் வகைப்படுத்தப்பட்டு அழைக்கப்படும்
தொடர்புடைய பதிவு – வெங்காயம்
நன்றி – தகவல் மூலம் – வடலியூரான் இணையம்
Leave a Reply