மருதனார்மடம் ஆஞ்சநேயர் கோவில்

Sharing is caring!

மருதனார்மடம் ஆஞ்சநேயர் கோவில் இணுவில் பகுதியில் உள்ள மருதனார்மடம் சந்திக்கு அண்மையில் யாழ்ப்பாணம் காங்கேசந்துறை வீதியை அண்டி அமைந்துள்ளது. பொதுவாக மருதனார்மடம் ஆஞ்சநேயர் கோவில் எனவே அறியப்படுகின்ற போதிலும், அனைவராலும் பெருமை மிக்க ஆலயமாக ஆஞ்சநேயர் கோவில் என அழைக்கப்படும் இந்த கோவிலின் இயற்பெயர் ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேய திருப்பதி தேவஸ்தானம் ஆகும்.

ஆலய சிறப்பு

ஆலயத்தின் சிறப்பை எடுத்தியம்பும் வகையில் காணப்படுவது இந்த கோவிலின் வளாகத்தின் முகப்பில் அமைந்துள்ள பிரம்மாண்டமான இந்த ஆஞ்சநேயர் சிலையே. 72 அடி உயரமுடைய குறித்த சிலையானது 2013ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது என்பதோடு மருதனார்மடம் பகுதிக்கு உட்பட்ட எங்கிருந்து பார்த்தாலும் காணக்கூடிய வகையில் அமைந்திருப்பதே இந்த சிலையின் தனித்துவமாகும். சிலர் இதனை மருதர் பெரும்பதி ஆஞ்சநேயர் ஆலயம் எனவும் அழைப்பர். அண்மைக் காலத்தில் நிறுவப்பட்ட இக்கோயில் வளாகத்தினுள் வீதியோரமாக அமைக்கப்படுள்ள மிகப்பெரிய அனுமன் சிலை இக்கோயிலின் சிறப்பு அம்சங்களில் ஒன்றாக விளங்குகின்றது. சி.வினாசித்தம்பி அவர்களின் வழிகாட்டலின் கீழ் தெல்லிப்பழை துர்க்கையம்மன் கோயில் பிரதம குரு இ.சுந்தரேஸ்வர சிவாச்சாரியாரின் முயற்சியால் இக்கோயில் அமைக்கப்பட்டது.

இப்பதி மீது பாடப்பட்ட முதல் பாடல்

மருதர்பெரும்பதி ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேய திருப்பதி அமைப்பதற்கு எண்ணிய போது பெருமைக்குரிய அருட்கவி சி.வினாசித்தம்பி அவர்களால் இப்பதிமீது பாடப்பெற்ற முதலாவது பாடல் பின்வருமாறு அமைகின்றது

”சிந்தனைக் கரியோனாகிச் சிவனுருத் தாங்கி இராம மந்திரமூர்த்தியாகி வருமடி யாருக்கெல்லாம் பந்தனை நீக்கி வேண்டும் பலனெலாம் கொடுக்கும் செல்வச் சுந்தரஆஞ்சனேய சுவாமியே போற்றி போற்றி…..”

என இங்கு அமையப்பெற்றுள்ள குறித்த ஆஞ்சநேயர் திருவுருவம் குறித்து அருட்கவி சி.வினாசித்தம்பியால் குறித்த பாடல் முதலாவதாக பாடப்பட்டது. ஸ்ரீ சுந்தர ஆஞ்சனேயர் திருவுருவம் , அழகனாய் கோலம் கொண்டு காண்பவர் கண்ணுக்கெல்லாம் கண்கொள்ளா காட்சியாக அமைந்து காணப்படுகின்றது. இத் திருவுருவத்தில் தியானத்தின் மேன்மைக்காக கண்மலா் மூடிக்காணப்படுகின்றது. அத்துடன் அருட்பெரும் கரத்தைக் கூப்பி இதயமேல் அணைவுசெய்து கோலமாம் கோலங்கொண்டு காட்சியளிக்கின்றது. அத்துடன் வடிவுடை மன்னனாகி சிரசின்கண் அழகு முடியும் , மார்பினில் வண்ணக்கோல நறுமண மாலைகளும் அணிந்து காணப்படுகின்றது. ஸ்ரீ சுந்தர ஆஞ்சனேயர் பக்த அடியவனான திரு வ. சிவநேசன் அவர்களின் கலியுகம் காக்கும் செல்வன் எனும் தலைப்பில் அமைந்த பாடல் மூலம் இவ் ஆஞ்சநேயரின் மகிமையை அறிந்து கொள்ளலாம். இந்நிலையில் இலங்கையின் தனித்துவத்தையும், தமிழர்களின் பண்பாட்டையும், வரலாற்றையும் எடுத்தியம்பும் பெருமை மிக்க ஆலயமாக மருதனார்மடம் ஆஞ்சநேயர் கோவில் விளங்குகின்றது.

ஆஞ்சநேயர் கோவிலின் முகப்பில் இருக்கும் அனுமான் சிலையானது மருதனார்மடத்திற்கே அடையாளமாக விளங்குகின்றது. 72 அடி உயரமான இந்த சிலையானது 2013 இன் முற்பகுதியில் நிர்மாணிக்கப்பட்டது. இது இலங்கையிலேயே மிக பெரிய ஆஞ்சநேயர் சிலையாக கருதப்படுகின்றது. மருதனார்மடத்திற்கு உட்பட்ட பகுதியில் எங்கிருந்து பார்த்தாலும் தெரியக் கூடிய வகையில் இச்சிலை அமைந்துள்ளது.

ஆலய வரலாறு

ஒரு குருவும் சீடனுமாக இருவர் இராம நாமத்தை ஓதி ராமசக்கரத்தை வழிபட்டு வந்த இடமே கோவில் அமைந்திருக்கும் இடம் என நம்பப்படுகின்றது. இக்கோவில் 22.04.1999 இல் தொடங்கி வைக்கப்பட்டு 29.01.2001 இல் மகாகும்பாபிடேகம் நடைபெற்றது. ஸ்ரீ சுந்தர ஆஞ்சனேயர் திருவுருவம் இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்டு இணுவில் மருதனார்மட திருப்பதியில் நிறுவப்பட்டது. இக் கோவிலில் காலை மதியம் மற்றும் அந்தி நேர பூசைகள் வழமையாக நடைபெறுவதுடன் சனிக்கிழமைகளில் சிறப்பு பூசைகளும் இடம்பெறுகின்றன. ஸ்ரீ சுந்தர ஆஞ்சனேயர் திருவுருவத்திற்கான கும்பாபிடேகத்தின் பின்னர் 18 அடி உயர ராஜகோபுரம் அமைக்கப்பட்டு அதன் கும்பாபிடேகம் 09.02.2005 இல் நடைபெற்றது.

துதிப்பாடல்

உருத்திர மூர்த்தம் கொண்ட சுந்தர ஆஞ்சநேயன் தூலமாம் லிங்கமாகிக் கோயிலின் வாசல் முன்னே மாமலை போன்ற வண்ணக் கோபுரம் மேலே நின்று ஆசியை வழங்கும் காட்சி காண்பவர் மேலோர் தாமே இயற்கையின் வனப்புக் கொண்ட தெய்வீகச் சூழல் தன்னில் குடியென்ன அமர்ந்த எங்கள் சுந்தர ஆஞ்சநேயன் தனெக்கெனக் கோயிலகிக் அற்புதக் கோலத்தோடு கோபுரம் மேலே நின்றான் குடிமுழு தாள என்றே கோபுரம் லிங்கமாக மருங்கினில் நாதம் சேர காண்பவர் மனதில் இராமன் தோற்றமாய் வந்து நிற்க கோபுர நடுவில் அனுமன் நின்றிடும் கோலம் காண்போம் குடமுழுக்கு காடி ஐயா குடி முழு தாண்டு எங்கள் குலமது நிமிர்ந்து வாழ நாட்டினில் அமைதி சேர இயற்கையின் அனர்த்தமின்றிக் நோய்பிணி இன்றி வாழ ஆசியை வழங்கி எம்மை ஆண்டிடும் ஐயா போற்றி

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyrights © 2008-2023 ourjaffna.com