எழுத்தாளர் துவாரகன் -தொண்டைமானாறு

ஆரம்பக் கல்வியை கெருடாவில் இந்து தமிழ்க் கலவன் பாடசாலையிலும் இடைநிலைக் கல்வியை தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்திலும் க.பொ.த உயர்தரத்தை யா/உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரியிலும் பயின்றார். பெற்றோர் சுப்பிரமணியம், கமலாதேவி.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைமாணி (தமிழ் சிறப்பு) பட்டத்தைப் பெற்றார். ’20ம் நூற்றாண்டில் ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்களின் கவிதை, புனைகதைகள்’ என்ற ஆய்வுக்காக பேராசிரியர் அ. சண்முகதாசின் நெறியாள்கையில் 2006 இல் முதுதத்துவமாணிப் பட்டத்தைப் பெற்றார்.
தற்போது வவுனியாவில் உள்ள சேமமடு சண்முகானந்தா மகாவித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணியாற்றுகின்றார்.
கவிதைகளுடன் விமர்சனத்திலும் ஈடுபாடு கொண்ட இவர் தொகுப்பு முயற்சிகளிலும் இறங்கியுள்ளார். இவரின் கவிதைகள் உயிர்நிழல், வார்ப்பு, பதிவுகள், திண்ணை, அதிகாலை.கொம், காற்றுவெளி மற்றும் பல இணைய இதழ்களில் வெளியாகியுள்ளன.
ஈழத்து இதழ்களான மல்லிகை, கலைமுகம், ஜீவநதி, ஞானம், புதியதரிசனம், வெளிச்சம், தாயகம், செங்கதிர் மற்றும் புலம்பெயர் இதழ்களான உயிர்நிழல். எதுவரை, போன்றவற்றிலும் தமிழகத்திலிருந்து வெளிவரும் யுகமாயினி, உயிர்மை ஆகியவற்றிலும் வீரகேசரி, தினகரன், நமது ஈழநாடு, உதயன், வலம்புரி, தினக்குரல் ஆகியவற்றிலும் இவரது படைப்புக்கள் வெளியாகியுள்ளன.
2010 இல் கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கலந்து கொண்டு ‘புலம்பெயர் சிற்றிதழ்களின் அரசியல்’ என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை வாசித்தார்.
2011 சனவரி கொழும்பில் நடைபெற்ற சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டில்கலந்து கொண்டு “இலத்திரனியற் சூழலில் புகலிடச் சிற்றிதழ்கள்” என்னும் ஆய்வுக் கட்டுரை வாசித்தார்.
இதழ் பங்களிப்பு
தொண்டைமானாறு கெருடாவில் கலை இலக்கிய சாகரம் என்ற அமைப்பினால் கொண்டு வரப்பட்ட ‘சக்தி‘ என்ற இதழின் ஆசிரியர்களில் ஒருவராக இருந்திருக்கிறார்.
வெளிவந்த நூல்கள்
மூச்சுக் காற்றால் நிறையும் வெளிகள் – கவிதைத் தொகுப்பு, வெளியீடு தினைப்புனம், யாழ்ப்பாணம்.
அலைவும் உலைவும், புலம்பெயர் படைப்பிலக்கியம் குறித்த பார்வை (கட்டுரைகள்), வெளியீடு:- தினைப்புனம், முதற்பதிப்பு 2009
தொகுத்து வெளியிட்ட நூல்கள்
அம்மா தேர்ந்த கவிதைகள், கவிதை நூல்
வெளிநாட்டுக் கதைகள், சிறுகதைத் தொகுப்பு, புலம்பெயர்வாழ் தமிழர்கள் எழுதிய சிறுகதைகள்
கிராமத்து வாசம், குழந்தைப் பாடல்கள், வித்துவான் க. வேந்தனார் தொடக்கம் மு. பொன்னம்பலம் வரை 16 கவிஞர்கள் யாத்த 21 குழந்தைப் பாடல்களின் தொகுப்பு
பாட்டிமார் கதைகள் (சிறுவருக்கான நாட்டுப்புறக் கதைகள்) 20 கதைகளின் தொகுப்பு, 2010
மின்நூல்
சொற்கள் தவிர்க்கப்பட்ட காலம் (“மூச்சுக்காற்றால் நிறையும் வெளிகள்” கவிதைத் தொகுப்பின் மீதான பதிவுகள்) 2011 ஏப்ரல்
விருதுகள்
”மூச்சுக்காற்றால் நிறையும் வெளிகள்” என்ற கவிதைத் தொகுப்பு 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூலுக்கான வடமாகாண இலக்கிய விருதினைப் பெற்றுள்ளது.
இலங்கை இலக்கியப் பேரவையால் வழங்கப்படும் கவிஞர் ஐயாத்துரை விருதினையும் அதே ஆண்டில் மேற்படி கவிதை நூல் பெற்றுக் கொண்டது.



Leave a Reply